Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருமத்தம்பட்டி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

ஜுலை 28, 2021 03:35

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் கருணாம்பிகா மில் ரோடு, தெற்கு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி(82). விவசாயி. இவரது மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இதையடுத்து கிருஷ்ணசாமி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார்.

பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது.

இவர் வீட்டை விட்டு வெளியில் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணசாமி கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் பார்வையிட்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்